03.004 திருவாவடுதுறை(திருஆவடுதுறை) | இடரினும் தளரினும் எனதுறுநோய் | திருஞானசம்பந்தர் தேவாரம்

Описание к видео 03.004 திருவாவடுதுறை(திருஆவடுதுறை) | இடரினும் தளரினும் எனதுறுநோய் | திருஞானசம்பந்தர் தேவாரம்

03.004 திருவாவடுதுறை(திருஆவடுதுறை) | இடரினும் தளரினும் எனதுறுநோய் | திருஞானசம்பந்தர் தேவாரம்

#SriGomuktheeswararTemple | #Thiruvavaduthurai | #PanniruThirumurai | ‪@PanniruThirumurai‬

"சிவபெருமானை தியானித்து இந்த பதிகத்தை பக்தியோடு பாராயணம் செய்தால் அருளோடு செல்வத்தையும் பெற்று சிறப்புற வாழலாம்."

இறைவர் திருப்பெயர்‬ : ஸ்ரீ கோமுத்தீஸ்வரர்

‪இறைவியார் திருப்பெயர்‬ : ஸ்ரீ ஒப்பிலா முலையம்மை

திருமுறை : மூன்றாம் திருமுறை 004 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்

பதிக குரலிசை : திரு சிவ மகேஸ்வர ஓதுவார்

சீர்காழியில் அவதரித்த திருஞானசம்பந்தர், இறைவன் அருளால் சிவபக்தியில் சிறந்து ஒவ்வொரு தலமாகச் சென்று சிவபெருமானை தேன் தமிழ்ப் பாடல்களால் போற்றி வழிபட்டு வந்தார். அப்படி அவர் திருவாவடுதுறை தலத்துக்கு வந்திருந்தபோது, சீர்காழியில் இருந்த அவருடைய தந்தை சிவபாத இருதயருக்கு ஒரு சோதனை ஏற்பட்டது. அந்தக் காலத்தில் வேதியராகப் பிறந்தவர்களுக்கு உரிய காலங்களில் வேதங்கள் வகுத்த நெறிமுறைகளின்படி வேள்விகளைத் தவறாமல் செய்யவேண்டும் என்று விதிக்கப்பட்டு இருந்தது. அதேபோல் சிவபாத இருதயரும் வேள்வி செய்யவேண்டிய காலம் வந்தது. ஆனால், அதற்குத் தேவையான செல்வம் அவரிடம் இல்லை.

சிவபாதருக்கு செல்வம் இல்லாத சிக்கல் என்றால், ஞானசம்பந்தருக்கு தந்தைக்கு செய்யவேண்டிய கடமையில் இருந்து தவறிவிட்ட தர்ம சங்கடமான நிலை. உள்ள நிலைமை திருஞானசம்பந்தருக்கு புரிந்தது. ஈசனின் அருளை வேண்டி, "இடரினும் தளரினும் எனதுறுநோய்" என்ற பதிகத்தைப் பாடினார். பதிகம் பாடி முடித்ததும், சிவபெருமானின் ஆணைப்படி சிவபூதம் ஒன்று தோன்றி, அங்கிருந்த பீடத்தின்மேல் ஆயிரம் பொன் கொண்ட ஒரு பாத்திரத்தை வைத்து, ''உமக்கு ஈசன் அளித்த இந்தப் பொற்கிழி உலவா பொற்கிழியாகும். இதில் எடுக்க எடுக்க வளருமே தவிர, குறையாது'' என்று சொல்லி மறைந்தது.

சிவபெருமானின் அருளால் தான் பெற்ற செல்வத்தை தந்தைக்கு அனுப்பி, ''இதில் உள்ள பொற்காசுகள் எடுக்க எடுக்க குறையாமல் வளரும். இதை உங்கள் வேள்விக்கு மட்டுமல்லாமல், சீர்காழிப் பதியில் உள்ள அனைத்து வேதியர்களும் வேள்வி செய்யப் பயன்படட்டும்'' என்று கூறி அனுப்பினார். பொற்கிழி வைக்கப்பட்ட இந்த பலிபீடம் வெளிப் பிரகாரத்தில் நந்திக்கு அருகில் இருக்கிறது. இதனைச் சுற்றிலும் பொற்கிழி கொண்டு வந்த பூதகணங்கள் இருக்கிறது. இங்கிருந்து சிவனிடம் வேண்டிக்கொண்டால் குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும் என்பது நம்பிக்கை.

இடரினும் தளரினும் எனதுறுநோய்
தொடரினும் உன்கழல் தொழு தெழுவேன்
கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை
மிடறினில் அடக்கி வேதியனே.
இதுவோ எமை ஆளுமாறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே. ..... (01)

வாழினும் சாவினும் வருந்தினும் போய்
வீழினும் உன் கழல் விடுவேன் அல்லேன்
தாழ் இளந் தடம்புனல் தயங்கு சென்னிப்
போழ் இளமதி வைத்த புண்ணியனே.
இதுவோ எமை ஆளுமாறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே. ..... (02)

நனவினும் கனவினும் நம்பா உன்னை
மனவினும் வழிபடல் மறவேன் அம்மான்
புனல் விரி நறுங்கொன்றைப் போதணிந்த
கனல் எரி அனல்புல்கு கையவனே.
இதுவோ எமை ஆளுமாறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே. ..... (03)

தும்மலொடு அருந்துயர் தோன்றிடினும்
அம்மலர் அடியலால் அரற்றாது என் நா
கைம்மல்கு வரிசிலைக் கணையொன்றினால்
மும்மதில் எரிஎழ முனிந்தவனே.
இதுவோ எமை ஆளுமாறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே. ..... (04)

கையது வீழினும் கழிவுறினும்
செய்கழல் அடியலால் சிந்தை செய்யேன்
கொய்யணி நறுமலர் குலாய சென்னி
மையணி மிடறுடை மறையவனே.!
இதுவோ எமை ஆளுமாறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே. ..... (05)

வெந்துயர் தோன்றியோர் வெருவுறினும்
எந்தாய் உன்னடி அலால் ஏத்தாது என் நா
ஐந்தலை அரவு கொண்டு அரைக்கசைத்த
சந்தவெண் பொடியணி சங்கரனே.
இதுவோ எமை ஆளுமாறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே. ..... (06)

வெப்பொடு விரவியோர் வினைவரினும்
அப்பா உன்னடி அலால் அரற்றாது என் நா
ஒப்புடை ஒருவனை உருவழிய
அப்படி அழலெழ விழித்தவனே.
இதுவோ எமை ஆளுமாறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே. ..... (07)

பேரிடர் பெருகி ஓர் பிணி வரினும்
சீருடைக் கழல் அலால் சிந்தை செய்யேன்
ஏருடை மணி முடி இராவணனை
ஆரிடர் படவரை அடர்த்தவனே.
இதுவோ எமை ஆளுமாறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே. ..... (08)

உண்ணினும் பசிப்பினும் உறங்கினும் நின்
ஒண் மலர் அடி அலால் உரையாது என் நா
கண்ணனும் கடி கமழ் தாமரை மேல்
அண்ணலும் அளப்பு அரிது ஆயவனே.
இதுவோ எமை ஆளுமாறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே. ..... (09)

பித்தொடு மயங்கியோர் பிணி வரினும்
அத்தா உன்னடி அலால் அரற்றாது என் நா
புத்தரும் சமணரும் புறன் உரைக்கப்
பத்தர்கட்கு அருள்செய்து பயின்றவனே.
இதுவோ எமை ஆளுமாறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே. ..... (10)

அலை புனல் ஆவடுதுறை அமர்ந்த
இலை நுனை வேல்படை எம் இறையை
நலம் மிகு ஞானசம்பந்தன் சொன்ன
விலை உடை அருந்தமிழ்மாலை வல்லார்
வினையாயின நீங்கிப் போய் விண்ணவர் வியனுலகம்
நிலையாகமுன் ஏறுவர் நிலம்மிசை நிலையிலரே. ..... (11)

ஆலய முகவரி : அருள்மிகு மாசிலாமனி ஈஸ்வரர் திருக்கோயில், திருவாவடுதுறை, திருவாவடுதுறை அஞ்சல், நாகப்பட்டிணம் மாவட்டம், PIN - 609 803.

குறிப்பு : இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம்.

"மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்"

Комментарии

Информация по комментариям в разработке